Thursday, December 15, 2005

'யார் நீங்கள்?' சுலபமான கேள்வி இல்லையா..

இதே கேள்வியை அறிமுகம் இல்லாத ஒருவர், அடையளாம் தெரியாத இடத்தில் வைத்து என்னைக் கேட்டால் முதலில் என்ன நினைக்கத் தோன்றுகிறதோ அதுவாகவே நான் இருக்கிறேன்.

இந்த கேள்வி புதிதல்ல தினமும் எதிர் கொள்கிறேன். ஏதேதோ பதில் சொல்கிறேன்.

சிலமுறை வெறும் பெயரை மட்டும் சொல்லியிருக்கிறேன். அது வெறும் அடையாளக் குறியீடு என்று உணர்ந்திருக்கிறேன்.

நானும் கணிப்பொறியாளனே... நானும் கோயமுத்தூர் தாங்க.. என வேலையையும் ஊரையும் அடையாளமாக அதிகம் உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

சிலவேறு இடங்களுக்கு பயணிக்கும் போது அடையாளங்கள் அகன்றிருக்கின்றன. கோவை ..தமிழ்நாடாகி .. இந்தியாவாகி இருக்கிறது. அடையாளங்கள் அகலமாகும் போது குறுகிய அடையாளத்தைப் பயன்படுத்திப் பலரைத் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தியிருப்பதை எண்ணி வெட்கப்படத் தோன்றுகிறது.

இன்னும் சில இடங்களில்.. 'நான் இங்க அவரைப் பார்க்கவந்தேன்.. அதைச் செய்ய வந்தேன் .." என சொல்லியிருக்கிறேன்.. கேட்ட கேள்விக்கு தவறான பதில் என்றாலும் இந்த கேள்வியே தவறு என சமாதனப்பட்டிருக்கிறேன். உண்மையில் இந்த கேள்விக்கு விடை அப்போது எனக்கு தெரியாது, அது எனக்கு தெரியாதென்பதையும் அறியவில்லை.

'நான் ஓவியன்..' 'நான் பள்ளியின் மாணவர் தலைவன்'.. 'கூடைப்பந்து விளையாட்டு வீரன்' 'நான் ஒரு முற்போக்காளன்'... என கைத்தொழில், பதவி, திறமை, சிந்தனை எதையும் விட்டுவைத்ததில்லை நான். ஒருவேளை இவைதாம் ஒருவர் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அடையளங்களோ என அதைத் தக்கவைக்க படாதபாடு பட்டிருக்கிறேன்.

இதுபோன்றே 'நானும் தமிழனே..' 'நான் பாரதியின் ரசிகன்'.. 'எனக்கு அரசியல் பிடிக்காது' .. மொழி, விருப்பு வெறுப்புகளும் என்னை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டின. இதனால் நான் பல பல நன்மைகளும் சில தீமைகளும் அடைந்திருக்கிறேன் என ஒப்புக்கொள்கிறேன்.

எதற்கிந்த அடையாளங்கள்.. விடை .. உலகறிந்த உண்மை.. 'சுயநலம்' . இதை மறுப்பவர் எவரேனும் இருக்கிறீர்களினில் ஒரு வார்த்தை எழுதுங்கள். உங்களிலிடம் இருந்து நான் கற்க வேண்டியுள்ளது.

சுயநலம் தவறல்ல. அது சுயநலம் என்பது தெரியாமலிருப்பது தவறு. 'எது தவறு?' உன் தேவைக்கல்லாமல் உனக்கே தெரியாமல் அடுத்தவர்களைப் பாதிப்பது.

அடையாளங்களைக் காக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாய் வேறு ஒரு அடையாளத்தைப் பாதிக்கிறது. விளைவு தமிழ்மண வாசகர்களுக்கு சொல்ல வேண்டிவதில்லை. விளைவு விவாதங்கள். விவாதங்களால் புதிதாக பலவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதும் உண்மையே.

காந்தியோ, பெரியாரோ, ஹிட்லரோ, பகத்சிங்கோ அல்லது தெரசாவோ யாராயினும் அடையாளங்களை தேடிப்போனவர்களாகத் தோன்றவில்லை. அடுத்தவர்களால் தரப்படும் அடையாளங்களே நிலைக்கின்றன.

நாம் நமது அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அடுத்தவர்கள் என்ன நினைகிறார்கள் என்பதே அடையாளமாக அமைகிறது. முயற்சிகள் போராட்டமாகி புதிய அடையாளங்களை ஏற்படுத்திவிடிகின்றன.

அனால் ஒன்று .... சுயத்தைத் தேடும் ஒருவன் அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. 'நான் யார்' என தனக்குத் தெரியாது என்பதைப் பற்றியோ அது அடுத்தவர்களுக்குத் தெரியத் தேவையில்லை என நினைப்பதைப் பற்றியோ வெட்கப்படுவதில்லை.

சுகா

5 comments:

Unknown said...

Unnai arinthaal nee unnai arinthaal ulagathil poradalaam...

Those lyrics flash through my mind as i read this blog.

Good compilation of an very interesting topic.

Looking fwd to hear more on this topic

Suka said...

நன்றி தேவ்.

jeevagv said...

"நான் என்னுடைய அடையாளங்கள் இல்லை"
பின் நான் யார், தொடரட்டும்!
நன்றி.

b said...

அருமையான பதிவு.

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

நான் இன்ன ஜாதி என்று குலைக்கும் தெருநாய்களை மட்டுமே வன்மையாகக் கண்டித்து வந்திருக்கிறேன் அன்றுமுதல் இன்றுவரை!

Suka said...

உங்கள் வருகைக்கு நன்றி. அடையாளங்கள் வெறும் அடையாளங்களே நம்மால் அவை அடைவது ஏதுமில்லை ; அவற்றால் நாமடையும் நன்மைகளும் தீமைகளும் ஏராளம் என்பதே என் சாரம்.

வருகை தந்த அனவருக்கும் நன்றி
சுகா