Saturday, December 29, 2007

பயணங்களும் பாடங்களும் - 2

பயணங்கள் பல திக்கிலும் இருக்கின்றன..
இலக்குகளை நோக்கி இடம் பெயர்வதும் ஒன்று..
கல்வியின் பயணம் அறிவின் பாதையில்..
பொருளாதாரப்பாதையின் பயண விளைவாக
செல்வத்தின் வளர்ச்சி..
சிலரின் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்வது
அமைதியின் பாதையில்..
இரசிப்புத்தன்மையின் பயணத்தின் இலக்கோ
எதையும் ரசிக்கப் பழகும் பக்குவத்தில்..
என பயணங்கள் பலபல திக்கிலும்..
எனினும் அனைத்துப் பயணத்திலும்
கையில் கடிகாரம்.. பயணத்திற்கேற்றவாறு..
மணிகளை, மணித்துளிகளைக் காட்டிக் கொண்டு சில
நாள்..வாரம் ..மாதமென சில..
வருடங்கள் மட்டுமேயென சில வித்தியாசமாக..

பயணங்களின் வாசனைகளும் பலபல...
சில ரசிக்க வைக்கின்றன..
சில முகம் சுழிக்க வைக்கின்றன..
சிலவற்றை நாம் கவனித்ததேயில்லை..
நமக்குப் பிடிப்பவை சில
அருகிலிருப்போருக்குப் பிடிப்பதில்லை..
அது சிலநேரம் கவலைப்படுத்துகிறது
சில நேரம் சந்தோசப்படுத்துகிறது..
எப்படியும் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன...

பெரும்பாலும் பயணங்கள்
பலரோடே இருக்கின்றன..
பலருடையேயான பயணங்கள்
இதமானவை பலநேரங்களில்..
பலர் சென்று பக்குவப்பட்ட பாதைகள்
வழியில் பார்க்கும் புதிய பாதைகள்
ஓர் இனம் புரியா ஆவலைத் தூண்டுகின்றன..

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும்
பயன்பாடதிகமில்லாமல் பளபளக்கும் சாலைகள்..
அவற்றின் பயணிப்பயையும் இலக்கையும் பற்றிய கற்பனைகள்
கிளர்ச்சியடைய வைக்கின்றன..
சாலைகள் நொடிகளில் கடக்கப்பட்டாலும்
அவற்றின் நினைவுகளும்
பயணிக்க வேண்டிய ஆவலும்
இரகசியமாய் புதைகின்றன மனதிற்குள்..

தனிமையின் பயணங்கள்..
வித்தியாசமானைவை…
சிறிது பயத்தையும் .. ஆவலையும் கலந்து தருபவை..
தனித்துப் பயணிப்பது பெருமையாய் இருந்தாலும்
பாதைகளின் பயமுட்கள்
நம்பிக்கையில் தைக்கின்றன சிலசமயங்களில்

தனித்த பாதையின் வளைவில்
திடீரென இடர்ப்படும் சில மனிதர்கள்..
ஊக்கமாகி உரமாகின்றனர் சில சமயங்களில்..
இருந்தாலும் பாதையின் அடுத்த பிரிவுகளில்
அவர்களின் காலடியற்ற கிளையை
தேர்வு செய்ய விழைகிறது மனம் ..

காலச் சக்கரத்தின் சுழற்சியில்..
இத்தனிப் பயணங்களின்
சிறு காயங்களும் களைப்பும்
தூரத்தில் ஏதேனும் ஒரு தலையைத்
தேட வைக்கின்றன...

பலரோடிணைந்த பயணங்களின்
பக்கத்திருக்கையின் மனிதர்களில் இனியவர்களை
நினைவுபடுத்துகிறது அந்த எதிர்பார்ப்புகள்..

அடுத்த பாதைப் பிரிவினில்
காலடித்தடம் பதிந்த பாதையில்
பதிக்கிறேன் பாதங்களை..
இன்னும் சிறிது நேரத்தில்
பலரோடிணைந்த பயணம்..

இம்முறை அருகிலமர்வோரை
ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்..
சன்னல் நோக்கி பார்க்க மனம் விழைவதில்லை..
இதோ வந்துவிட்டார்..
ஆச்சர்யம் .. இவரோடு ஏற்கனவே பயணித்திருக்கிறேன்..
மகிழ்ச்சியாக.. இதமாக..
புன்னகைப் பரிமாற்றத்தில்
அவருக்கும் மகிழ்ச்சியெனப் புரிகிறது..

தனிவழிகளின் வேதனைகள் சற்றே
மறக்கப்பட ஆரம்பிக்கின்றன..
வார்த்தைகளாக அன்பு பரிமாறப்பட
பேசியதேதும் நினைவில் நிறுத்தப்படாமல்
பேச்சு மட்டும் தொடர்கிறது..
பயணத்தின் வேகம்
கொஞ்சம் பேச்சைக் குறைக்கிறது..

சன்னலின் பார்வைகள்
பனைமரங்களையோ..
குதூகலிக்கவைக்கும் ஆலமரங்களையோ காட்டினாலும்
மனம் பேசியதிலேயே லயிக்கிறது..
துணையொன்றின் தேவையைப்
புரியவைக்கிறது..

பயணத்தில் நான் பெரும்பாலும் தூங்குவதில்லை..
என் தோளில் திடீர்க் கனம்..
என் தோளோடு சாய்ந்திருந்த
அவரது தூக்கத்தைக் கவனிக்கிறேன்..
மூடிய கண்கள்
ஒரு நம்பிக்கையைக் காட்டுகின்றன..
இப்போது அசையாமலிருக்க விழைகிறேன்..


சுகா

Friday, December 28, 2007

பயணங்களும் .. பாடங்களும் - 1

நீண்ட பயணம் இது…
வழிகள் மிகவும் பழக்கமாகி விட்டன
வழித்துணைக்கெனெ வழிகளே எனக்காக

பயணங்கள் இனிது
எதிர்ப்படும் எதார்த்தங்கள் சுவையானவை
ரசிக்க வைக்கின்றன..

இரயில் பயணத்தின் சன்னலோர நினைவுகள் கூட..
காற்று வீசாக் கோடையின்
மதிய நேரக் கால்நடைப் பயணத்தில்
கேசத்தைக் கொஞ்சம் கலைத்துச் செல்கின்றன..

பயணங்களின் அலுப்பைத் தீர்ப்பது கூட
அதன் நினைவுகளாகவே இருப்பது
ஆச்சர்யமாயிருக்கிறது..

வேகமான பயணங்கள்
பெரும்பாலும் ரயிலிருக்கைகளில்..

கடக்கப்படும் எதையும் முழுதாகக் காட்டாமலே
கூட்டிச் சென்று விடுகிறது..
காணக் கிடைத்ததென்னவோ
தூரத்தில் ரயிலை நோக்கி நகரும்
சில பனைமரங்களும்
அதைப் பற்றிப் பாடம் நடத்திய
பள்ளி ஆசிரியரின் நினைவு தாம் என்றாலும்
ரயிலோடு சேர்த்து
பழைய நினைவுகளும்
காண்பதை மறைத்துக்
கண்டதை காட்டிக்கொண்டிருந்து விடுகிறது

அடுத்த தண்டவாளத்தில்..
சட்டென எதிரே செல்லும் ரயில்..
நினைவுகளைக் கிழித்துக்
கொஞ்சம் கலவரப்படுத்தி விடுகிறது
திடுக்கிட்டுத் திரும்பி..
அருகே அமர்ந்திருப்போரைப் பார்க்கையில்
கொஞ்சம் அசடு வழியவேண்டியிருக்கிறது

அழகான கைக்குழந்தை ஒன்று ..
என்னையே கவனித்து கொண்டிருந்ததைக் கூட
அப்போது தான் பார்க்கமுடிகிறது..

எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்ததோ
பனைமரத்தைப் பார்த்துக் கொண்டு
என்னை உதாசீனப்படுத்தினாயோ என
பாரதி மீசையோடு என்னை
முறைப்பதுபோல் தோன்றியது

கண்ணை சிமிட்டிக் கொஞ்சம் சிரிப்பூட்ட
தன் பொக்கை வாயை அழகாகக் காட்டிச் சிரிக்கிறது
பனைமரமும் பள்ளிவாத்தியாரும்
பறக்கிறார்கள் நினைவிலிருந்து..

“நல்ல வெயில் இல்ல தம்பி” என
நெற்றியில் துண்டை ஒற்றியபடி
எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் கேட்க..
கவனிப்பிற்குக் காத்திருந்த இன்னொரு குழந்தை..
ஏதோ குத்தியது சுருக்கென்று..
மனிதர்கள் ..
இரத்தமும் சதையுமான இயற்கை..
அமோதித்துக் கொண்டே பேச்சைத் தொடங்கினேன்..

எதிர்பார்ப்புகளேதுமற்ற விசாரிப்புகள்
ஏதேனும் வார்த்தைகளில் தொடர்பைத்
தேடி மேலும் பேச விழையும் மனம்..
சிரமமில்லாமல் பரிமாறப்படும் சிரிப்புகள்..
அடுத்த ரயில் எதிரே போனதைக் கூட
கவனிக்கவே இல்லை .. இந்தமுறை

வகுப்பு முடிந்து செல்லும்
ஆசிரியரைப் போல சென்று கொண்டிருக்கிறது..
அந்த வண்டி..

இதுவரை கன்னத்தில்
லேசான துருவுடன் அழுந்தி
அதன் அச்சை மட்டும் பதித்திருந்த
சன்னல் கம்பிகளின்
வழியாக தென்றலும் கசிகிறது

பயணங்கள் பாடங்களைத் தர
தவறுவதே இல்லை…
பாடங்கள் மறக்கப்பட்டாலும்
அதை மன்னித்துவிடும்
நல்ல ஆசிரியரின் புன்னகையோடு..
மீண்டும் பாடங்களைச் சொல்லித்தர
தயங்குவதே இல்லை பயணங்கள்..

தொடரும்.. பயணங்களும்… பாடங்களும்…
சுகா

Sunday, September 30, 2007

பென்சில் ஓவியம் (செப்டம்பர்)


போன மாதம் பாதியில் விட்டதை ஒரு சில சொதப்பல்களுடன் எப்படியோ முடித்தாகிவிட்டது :)
மேலும் சில ஓவியங்கள் இங்கே : pencilsketch.blogspot.com
சுகா

Monday, September 10, 2007

எள்ளி நகையாடியவர்கள் எங்கே இப்போது

எங்கே செல்வன் ? எங்கே குமரன் ? :) நான் கூகுளைப் பற்றி இதை எழுதியபோது ஏமாற்றுகிறேன் என்று சொன்னீர்களே ..

http://sukas.blogspot.com/2006_03_01_archive.html

பாருங்கள்.. ரகசியம் இப்போது வேறு நிறுவனம் வழியாக வெளியாயுள்ளதை.

http://www.engadget.com/2007/09/10/mind-controlled-motorized-wheelchair-demonstrated/

இது தவிர இன்னமும் பல விஷயங்கள் இதைப்பற்றி
http://www.engadget.com/search/?q=thought%20controlled

உண்மை வெல்ல சில பல ஆண்டுகள் தேவைப் படுகிறது .. என்ன செய்ய..

Thursday, August 16, 2007

நவீன ஓவியங்கள்

நளாயினி அவர்களின் இந்தப் பதிவில் முதல் மறுமொழியில் ஒரு அனானி அந்த புகைப்படம் புரியவில்லை என்றும் புரியாததால் தான் அது நவீன ஓவியமா என உண்மையாகவே அங்கலாய்த்திருந்தார். அந்த அனானியின் நிலையில் நானும் இருந்திருக்கிறேன்.. நம்மில் பலரும் இருக்கலாம்.. எனவே நவின ஓவியம் குறித்த எனது எண்ணத்தை பகிர இந்த பதிவு.



மனம் அழுத்தமாக உள்ள சமயங்களில் எப்போதாவது புல்லாங்குழலின் இதமான இசையைக் கேட்டதுண்டா.. அந்த இசை நமது சுவாசம் போல் நம்மையுமறியால் உள்ளே சென்று நரம்புகளில் இதமாக ஊடுருவுகிறது.. அந்தப் புல்லாங்குழலின் இசை நமக்கு எதையும் குறிப்பாக உணர்த்துவதில்லை என்றாலும் அது மனதை இதமாக தாலாட்டுகிறது..

ஒவ்வொருவரையும் அவரவரின் அமைதியான இதமான கற்பனை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த சொர்க்கம் அவரவரின் கற்பனையில்... கோடைகாலத்தின் சாலையோர ஆலமரத்தடியாக இருக்கலாம்..அல்லது மரங்களடர்ந்த உயர்ந்த மலையோன்றின் சிகரத்தின் மயங்கிய மாலையாக இருக்கலாம்.. கேட்பவர்களை அந்த இசை ஆட்கொள்கிறது..




அதுவே ..கண்ணதாசனின் சோககீதத்தை தத்துவப் பாடலைக் கேட்கும் போது அதன் அர்த்தம் பொதிந்தவரிகள், சில வேளைகளில் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.. ஆழமான அந்த வார்த்தைகளின் தேர்வு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

வைரமுத்துவின் அடர்த்தியான உவமேயங்கள்.."முகிலினங்கள் அலைகின்றன முகவரிகள் தொலைந்தனவோ.." போன்ற கற்பனைகள் .. பாடுபொருள் பற்றிய கேட்பவரின் கற்பனைகளுடனேயே கவிஞரின் திறமையையும் மெச்சி சிலாகிக்க வைக்கின்றன.




நவீன ஓவியங்கள் முன்னால் சொன்ன இசைக்கு ஒப்பானவை. அர்த்தம் என குறிப்பாக ஏதும் இருப்பதில்லை. ஆனாலும் அதை அனுபவிப்பதில் தவறில்லை. ஓவியரின் கண்கொண்டு பார்க்க வேண்டியதில்லை ஆனாலும் அந்த வண்ணக் கலவைகள் மீட்டும் நுண்ணிய இசையைக் கண்கொண்டு கேளுங்கள்.. அவை புதிர்களல்ல தீர்வு காண்பதற்கு .. ஓவியரின் மனநிலையையும் கருப்பொருளின் ஆழத்தையும் கற்பனை செய்து பாருங்கள்..அமைதியான சூழ்நிலையில் சில ஓவியங்கள் இசையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். உணர்வுகளை ஆட்கொள்ளவே படைக்கப் படுவதால் பெரும்பாலும் பிரம்மாண்டமான அளவில் படைக்கப்படுகின்றன இவை.




ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்கள் , கவிதைகளுக்கு ஒப்பானவை. அர்த்தங்கள் வெளிப்படை.. பார்ப்பவர் அனைவருக்கும் ஒரேவிதமான விருந்து. பெரும்பாலும் ஓவியரின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன அல்லது ஒப்பிடப்ப்டுகின்றன. ஓரிரு தடவைகளுக்கு மேல் பார்க்க மனம் அவ்வளவாக விளைவதில்லை.. எத்தனை முறை பார்த்தாலும் ஒரே பொருள் தான்.. ஒவ்வொரு முறையிலும் முன்பு பார்க்க மறந்த நுண்ணிய பொருள்களை திறனைக் கண்டு வேண்டுமானால் வியக்கலாம்.

சில இயற்கை காட்சிகளின் ஓவியங்கள் உங்களை ஆட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டலாம், இருந்தாலும் அவை ஏக்கத்தின் தாக்கமாக இருக்கலாமே தவிர புதிய உணர்வுகளைத் தூண்டும் வாய்ப்புகள் குறைவு.




நவீன ஓவியங்கள் ஒவ்வொரு முறை பார்த்தாலும் ஒரு புதிய உணர்வை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தாக்கமும் ஓவியரின் கருப்பொருளை நோக்கி நகர்த்துகின்றது ரசிகர்களை.

நவீன ஓவியத்தை அதனை வடிக்கும் திறன் கொண்டு எடைபோட வேண்டாம்; அது ஏற்படுத்தும் தாக்கம் கொண்டு எடை போடுங்கள்.

பொதுவாக சில ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன, சில மனதினைத் தாக்குகின்றன. அனைவருக்கும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்த தேவையில்லை. இசை போன்றவை இவை.. அடுத்தமுறை நவீன ஓவியங்களை பார்க்கும் போது கண்ணைமூடி அவற்றின் வண்ணக்கலைவையை கற்பனை செய்து பாருங்கள் ; உங்களை ஆச்சர்யப்படுத்தலாம் அவற்றின் தாக்கம்.


மணிக்கணக்கில் வரையப்பட்டு நிமிடக்கணக்கில் எடைபோடப்படும் ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்களுக்கு மத்தியில் , வருடக் கணக்கில் சிந்திக்க/அனுபவிக்க வைக்கும் நவீன ஓவியங்கள் இப்போது பிரபலமாவதில் ஆச்சர்யமேதுமில்லை.




எனக்குத் தெரிந்த சுமாரான நவீன ஓவியர் திருவாளர் இயற்கை.. மேகக் கூட்டங்களிலும்.. வனத்திடை சூரிய ஒளியின் நிழல்களிளேயும் என பல இடங்களில் வரைந்து தள்ளுகிறார். அவற்றில் சில ரசிக்கவும் படுகின்றன.





ஓவியங்களைப் பற்றி எழுதுவது போல் ஓவியங்களுக்கு செய்யும் துரோகம் எதுவுமில்லை. ஆதலால் சில நவீன ஓவியங்கள் பார்வைக்கு.






மூலம் : http://www.yessy.com/




மூலம் : http://www.artlex.com/ArtLex/f/images/futur_balla.lampada_xlg.jpg








சுகா

பென்சில் ஓவியம் - 3


இது எனது புதிய கிராஃபைட் பென்சில் (தமிழ்??) ஓவியம்.

மற்றவை : http://pencilsketch.blogspot.com/

சுகா

Thursday, August 09, 2007

தீராப் புல்தரை

கானமுயல்கள் சிரிக்கின்றன
யானை பிழைத்த வேல் ஏந்திக் கந்திய
கைகளைக் கண்டு

பல சின்னஞ்சிறு கதைகளும்
கேட்கப்படாமலே போக
அடைக்கின்றன காதுகளும்
பசியோ..

பசியில்லை ஆடுகளுக்கு
தீராப் புல்தரை..

நிமிர்ந்தறியாத கழுத்துமட்டும்
உறுத்துகிறது
ஆனாலும் புல்சுவை அதிகம்

புல் வளர்ப்பது புலி என்பது
தெரிய வாய்ப்பில்லை

நிமிர்தல் பாவம்..
சொன்னது கீதை

கீதையின் பக்கங்களிலும்
புலியின் உரோமங்கள்

தீராப் புல்தரை தீர்ந்தாலும்
நிமிராதது கழுத்து

புல்தரை தீர்ந்தது விதியால்..
முன்செய் பாவங்களால்

நிமிர்தல் பெரும் பாவம்..
பாவம் தருவது தீரும் புல்தரை

தீரும் புல்தரை மீண்டும் வேண்டாம்
பாவ நிமிர்தலிலும்
சாவது மேல்

புலிகளின் போதனை
கைமேல் பலன்

ஆடுகள் சுவைதான்
புலி உண்ணுமா புல்லை

மேயும் போதும்
பேசிக் கொள்கின்றன
நிமிர்வதைப் பற்றிய
பாவக் கதைகளை

நிமிர்தல் சிரமம்
நிமிர்தல் பயம்..

குனிதல் சுகம்
குனிதலில்...
தீரும் புல் ஒன்றே பயம்
தீரும் புல் பாவத்தால்
நிமிர்தலே பாவம்

மை தீர தீர
கீதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றன
புலிகள்


சுகா

Tuesday, October 17, 2006

கட்டங்களும் சில கோளங்களும்...

பிறந்ததும் நாம் வளர்வதும் நாம்
ஆனால் வாழ்க்கை...
சில கட்டங்களும்
அதில் அடைப்பட்ட கோளங்களிலும்

நெருப்புக்கு தேவைப்படாத
சிக்கிமுக்கிக் கற்கள்..
ஒலி வேகப்பயணத்துக்குக் கூட
தேவைப்படாத சக்கரங்கள்...
சிரிக்கின்றன
மரத்தடியில் கை நீட்டி அமர்ந்திருப்பவரைக் கண்டு

செயற்கை இதயமும் , இறந்து பிறந்த கண்களும்
ஏளனம் செய்கின்றன எழுத்தாலும் எண்ணாலும் தன்
விதியை ஆராயும் மதியைக் கண்டு

பயங்களும் குழப்பங்களும்
வாய்ச் சாதுர்யக்ககாரர்களின்
சாமர்த்தியத்திற்கு பரிசாகின்றன..

கேள்விகள் அவமதிக்கப்பட்டு
பரிகாரங்கள் பதிலாகும் கேலிகள்
பரவசப்படுத்துகின்றன கோமாளிகளை

பஞ்சாங்கப் பக்கங்கள்..
கண்டறிந்த தோஷங்கள்
மிச்சப்படுத்துகின்றன பலரின்
திருமணச் செலவை

எதையும் ஆராயும் ஆறறிவு கூட ..
கூண்டில் வீசப்படும் சில
பொட்டுக் கடலைகளுக்கு
விலை போகிறது

மனிதன் குறுக்கே போக..
விரட்டப்படும் பூனைகள்
விழுந்து விழுந்து சிரிக்கின்றன
விதி பற்றிய பயமேதுமின்றி

ஆயிரம் காலத்துப் பயிருக்கும்
பத்தாயிரம் காலத்துப் பஞ்சாங்கங்கங்கள்
வக்காலத்து வாங்கப்படுகின்றன..

பின்னே இனிக்குமென
விழுங்கப்படும் கசக்கும் விஷங்களைப்
பார்த்துக் கைகொட்டி சிரிக்கின்றன
முதுநெல்லிக் கனிகள்

கணிணிகளை வாங்கக்கூடப்
பார்க்கப்படும் நல்ல நேரங்கள் கண்டு
நாள்காட்டிகளையும் நகைக்கின்றன

வாரும்..
பகுத்தறிவுப் புத்தகத்தின்
முருகன் துணையாய்
வாழ்வோம்..