Sunday, August 27, 2006

சமூகம்

மக்களால் மக்களுக்காக ..
பண்பட்ட வாழ்க்கைக்கெனவாய்..
வாழையடி வாழையாய் விதிமுறைகள்

யார் வகுத்தது .. யாருக்காக வகுத்தது இந்த விதிமுறைகள் ?
கேள்விகள் .. பரவாயில்லை
விதிமுறைகளைப் பற்றிய கேள்விகள் ..ம்ஹும்

வல்லான் வகுத்தது வரலாறு மட்டுமா..
விதிமுறைகள் ?
போதும் என்னும் பொன் செய்யும் மருந்தைப் பொது ஜனத்துக்கு போதித்து
பொன் சேர்த்தது யாரோ ?
ஊரோடு ஒத்து வாழ ஊருக்கு அறிவுரை செய்து அதையே கொண்டு
நாடு பிடித்தது யாரோ ?

போதனைகள் என்றுமே போதிப்பவர்க்கல்ல
அப்படி இருந்திருந்தால் அவர்களால் போதிக்கமுடியாது
அவர்கள்...அரியணைகள்
அரியணைகள்... விதிப்பவை
விதிப்பவைகளை மதிப்பவைகளை மாயையாய் மதிப்பவைகள்
விதிப்பவைகளை மிதிப்பவைகளை அவமதிப்பவை ..முளையிலேயே அழிப்பவை

கேள்விகள் கேட்கத்துணிபவன்..
தனித்திருக்கப்படுகிறான்
கேட்கத் துணியாதவர்களின் கேள்வி ஞானமெல்லாம்
கேள்வியாய் ..கேலியாய்.. அவன் மீது.

அந்த தனிமை ஒரு மலைமுகடு
அவனால் அனைத்தையும் பார்க்கமுடிகிறது...
அவன் மீது கேட்கப்படும் கேள்விகள்
அவனை இன்னும் தெளிவாக்குகிறது...
விடைகள் தேவையில்லாத கேள்விக் கணைகள் அவை
ஆனால் அவனுக்கு விடைகள் கிடைக்கின்றன..

சில அவனுக்கு தெரிந்திருக்கின்றன..
சில அவனால் தேடி தெரிந்து கொள்ளபடுகின்றன.
தேடித் தெரியும் வரை ..அவனுக்கு விடை தெரியாதென்பதாவது தெளிவாகத் தெரிகின்றது.

விடையின் அறியாமை அவனுக்கு தேடலையும்..
அந்த அறியாமையை அறிந்தமை அவனுக்கு தெளிவையும் பரிசளிக்கிறது.

கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த தருமிகளின் அண்மை
வேகமாக வளர்த்துகிறது அவனை...
அவர்களின் பச்சாதாபம் அவனுக்கு கேளிக்கையாகிறது

திருவாளர் பொதுஜனத்தின் மனசாட்சி..
ஹும்..தெளிவு .. பெரிய தெளிவு... யாருக்குத் தேவை
ஊர் சுகம் .. ஒத்து வாழ்தல் சுகம்
கேள்விகள் அநாவசியம் .. யார் கண்டார்..அதன் விடைகள் விதிகளுக்கு எதிராகக் கூட இருக்கலாம்..
விதிகள் வெகு அவசியம்...
ஆமாமாமம்... விதிகள் வெகு அவசியம்

ம்..என்ன ..வாழ்க்கை கொஞ்சம் அலுப்பாயிருக்கிறதே ..
அதனாலென்ன..கேள்வி கேட்பவன் யாராவது கிடைக்காமலா போய்விடுவான்..
நம் கேள்விகளைத் தயார்செய்து கொள்ளலாம்.

முன்னோர் சொன்னதை எதிர்த்து எப்படி அவன் கேட்கத் துணிந்தான் ..
ஏன் கேட்டான் .. என்ன கேட்டான் ..
ம் ... அவன் கேட்டதும் சரிதானோ...
அட ஆண்டவா... யோசிக்கிறேனே..
தப்பு .. தப்பு...

விதிமுறைகள் விளக்க வகுப்பு எடுக்கவேண்டும்...
எந்த வகுப்பு எடுக்கலாம்..?
புதிய 'வித்தியாசமான' திரைப்படங்கள் பார்ப்போமா ?
ஆன்மீக வகுப்பேதும் போவோமா..?
பண்பாட்டுக் காவலர்களின் படைப்பேதும் படிப்போமா ?
உறவுகளின் பெருமை சொல்லும் நாடகங்கள் களிப்போமா ?
அகராதிகள் படிப்போமா ...
நம்மவர்களோடு அவனைப் பற்றி உரையாடுவோமா ?
ஆஹா... அதுதான் சரி.
சுவாரஸ்யம் அதுதான்...

ஏனித்தனை கேள்விகளவனிடம்..
அகராதிகள் படித்ததில்லையா அவன்...
அர்த்தங்கள் தெளிவுதானே...
இதிலென்ன சந்தேகம்... பொல்லாத சந்தேகம் ..
அர்த்தங்களைப் பற்றி எப்படி கேள்விகள் .. சே
கால விரயமது...
காலத்தை உபயோகமாய் கழிப்போம்..
அனைவரையும் போல் ..
இனிய உலகை ரசிப்போம் ..
பிடித்ததை செய்வோம்..
ஒவ்வொரு நொடியையும் அணுவணுவாய் ரசிப்போம்..

Sunday, August 06, 2006

ரயில் நிலையம்...

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத இடம்.. உள்ளே நுழைந்ததும் நமக்கும் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. நேரம் எவ்வளவு இருந்தாலும் கொஞ்சம் வேகமாகவே நகரத் தூண்டுகிறது. நெரிசலில் வளைந்து வளைந்து ஊடுருவி செல்கிறேன்..

ஊருக்குச் செல்லும் நாட்களில் சில மணிகள் முன்னதாகவே சென்றுவிடுவது வழக்கம். எனக்கு அலுப்பாகாத விஷயங்களில் ரயில் நிலையமும் ஒன்று.. அதிக ஆளில்லாத ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்து சாவகாசமாய் வேடிக்கை பார்ப்பது தனி சுகம்.

பரபரப்பாக நகரும் ஆட்கள்.. வியாபாரிகளின் கலவையான சத்தம்.. வந்து சேர்ந்த ரயிலிலிருந்து இறங்கும் களைத்த ஆட்களும் அவர்களின் களைக்காத பரபரப்பும்.. நெரிசலில் வளைந்து நெளிந்து வேகமாகச் செல்லும் விலாங்கு மனிதர்களும்..பாரங்களின் சிரமங்கள்..பேரங்களின் வெற்றி, தோல்விகள்.. நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்.. மனிதர்கள் ..அவர்களின் பேச்சுகள் பாவங்கள்...

பெரிய மேடையில் அரங்கேறும் ஒரு எதார்த்தமான நாடகம் போல.. இங்கு யாரும் கதாநாயகர்கள் இல்லை..நாயகிகள் இல்லை.. கதையும் இல்லை.. முடிவும் இல்லை..ஆனால் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை.. நாயகர்கள் ஜெயிப்பதைப் பார்த்துப் புளித்துப் போன எனக்கு ...யூகிக்க முடியாத ..காட்சிகளுக்கு காட்சி வித்யாசமான ஒரு படத்தை அளித்தது போல்... எனக்காக மட்டுமே தயாரித்து அளித்தது போல் ஒரு திருப்தி. அனைத்தையும் மேலாண்மை செய்யும் ஒரு கடவுள் போல ஒரு திருப்தி.. கொஞ்சம் சேடஸ்டிக் திருப்தியும் கூட..

எனது நேரமும் வருகிறது. நான் மேடைக்கு வரும்போதும் எங்கிருந்தோ பார்க்கும் பார்வையாளர்களின் பார்வை முதுகில் உறைக்கிறது.

ரயிலில் தொற்றி ஜன்னல் வளியே பார்க்கும் போது.. சிலவேளைகளில்.. பரபரப்பான பிளாட்பாரத்தின் நடுவில் அமர்ந்து உணவைப் பரிமாறி சாவகாசமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடுவாசல் இல்லாதாரைப் பார்க்கும் போது.. கொஞ்சம் பொறாமையாய் இருக்கிறது. அந்த நொடியிலேயே ஒரு பொருளாதார மாற்றம் வந்து அவர்களையும் என்னைப்போல் ஏதாவது பரபரப்புக்கு ஆளாக்கமுடியாதா..

பிளாட்பாரப் பெஞ்சுகளின் ஒய்யார பிச்சைக்காரர்களின் அரங்கநாதர் படுக்கையும், இரும்புப் பெட்டிகளை நோக்கிய அலட்சியப் பார்வையும் என்னைச் சில சமயம் கேலி செய்கிறது. அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறேன்.

ரயில் நகரும் நேரத்துக்கான விசில் ஏதோ சில சத்தங்களை அடக்கிவிட்டது போலிருக்கிறது. ஜன்னல் கம்பிகளில் சேர்ந்திருந்த கைகள் கொஞ்சம் இறுக்கமாகி பின் தளர்கின்றன. தன்னிச்சையாய் கால்கள் நகர்கின்றன. இலக்கு வரை நீண்ட ப்ளாட்பாரமும் இதே வேகத்தில் நகரும் ரயிலும் அமைதியாய்க் கேட்கப்படும் வரங்களாகின்றன. அதிகமாகும் வேகம் கால்களை நிறுத்தி கையை மட்டும் அசைக்க வைக்கிறது. அந்த நொடியில் பயணத்தின் அநாவசியத்தை நினைக்கத் தோன்றுகிறது.

மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலை நோக்கிய கையசைப்புகள் .. வாயிலில் இருந்து தலை மறையும் வரை பார்த்து அசைக்கப் படும் கைகளும் ஏதோ பேசிக்கொள்கின்றன போலும்.

எனக்காக அசையாத கைகளாயிருந்தாலும் , அவை எப்படியோ எனக்காக அசைக்கப்பட்ட கைகளை நியாபகப்படுத்தி விடுகின்றன. நியாபகம் சிலவேளைகளில் கண்ணின் ஒரத்தில் லேசான ஈரத்தையும் விட்டுச்செல்கிறது. ரயில் செல்லக் கலையும் கூட்டத்திற்கு முன்பே அந்த ஈரமும் காய்ந்துவிடுகிறது. கலைந்து செல்லும் கூட்டத்தில் சிலவேளை இருக்கையில் அந்த ஈரம் காய இன்னும் சிறிது நேரமாயிருப்பதை உணர்கிறேன்.