Saturday, February 11, 2006

அழுகை..


விழி வழி வரும் நீரில்
கரையும் முகமூடிகள்..

பக்குவக் குப்பைகள்
எரிக்கப் பட
குளிர் காயும்
குழந்தை மனம்..

~சுகா

இந்தப் படம் லெதர் ஷீட்டில் ச்சார்க்கோல் கொண்டு வரையப்பட்டது.

Sunday, February 05, 2006

முகவரிகள் !

தேடல்கள் சுவையானவை. தேடும்போது இருக்கும் சுகத்தைவிட தேடிய பொருள் கைவசமாவதில் சுகமதிகமென உணர்பவர்களும் பலருண்டு. தேடல்கள் சுகத்தை குறைக்கும் சுமைகளாவதுமுண்டு. அத்தகைய தருணங்களில் முகவரிகள் தேவைகளாகின்றன. யாரோ ஒருவரின் தேடற்பலன் மற்றொருவருக்கு பலனளிக்க.. மற்றவரின் தேடற்சுமையைக் குறைக்க.. உருவாக்கப்படும் அடையாளங்கள் முகவரிகள்.

முகவரிகள் பலவிதம் .. கலைஞர்களாக , ரசிகர்களாக, பக்தர்களாக, பகைவர்களாக.. இன்னும் எத்தனையோ. நான் ஒரு ஓவியன். நானும் இளையராஜாவின் ரசிகன். எனது இஷ்ட தெய்வமும் முருகன் தான். எனக்கு புதிய திரைப்படப் பாடல்கள் பிடிக்காது.. என நானும் எத்தனையோ முகவரிகளில் ஒன்றியிருக்கிறேன். பிறப்பால் அமையும் உறவு, சாதி, நாடு, மொழி, இனம் என்ற அடையாளங்களிலிருந்து நானாகத் தேடிக்கொண்ட முகவரிகள் வித்தியாசப்பட்டவை.

ஒவ்வொருவரின் முகவரிகளின் தொகுப்பும் கூட்டாகச் சேர்ந்து ஒரு தனி அடையாளத்தை அவருக்கு அளிக்கின்றன. வீணை ரசிகன், கிரிக்கெட் பிடிக்காது, மேற்கத்திய நடனம் பிடிக்கும், இசை பிடிக்காது என்ற பட்டியல் யாரவது ஒருவரின் பேரைத்தாங்கி அவர்களுக்கு முகவரியாகிறது.

முகவரிகள் தவறில்லை. சிலநேரங்களில் முகவரிகள் மட்டுமே போதுமென்றாகி அவைகாட்டும் கருப்பொருள்கள் தேவையற்றதாகின்றன. இதன் விளைவுகள் விபரீதமாகிறது.

சில நாள் முன்பு அலுவலகம் முடித்து வீடு திரும்பும் போது வழியிலிருந்த கடை ஒன்றில் திராட்சைப் பழமும் இன்ன பிற பொருட்களும் வாங்கினேன். வீட்டிற்குபண வந்து விலை ரசீதைப் பார்த்தால் எப்போதும் இருப்பதைவிட மூன்று மடங்கு விலை அதிகமாக இருந்தது.

அந்த திராட்சைப் பழக் கொத்தைப் பார்த்தேன். சிறிது வித்யாசமாக இருந்ததாகத் தோன்றியது. ஒன்றை எடுத்து வாயில் போட்டால் அதன் சுவையும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. சிறிது சாப்பிட்டபின் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருப்பது போல்கூடத் தோன்றியது. விலைக்கு ஏற்றாற் போல்தான் எல்லாம் என எண்ணினேன்.

அடுத்த நாள் அதே கடைக்குச் சென்றபோது அந்த திராட்சை விலை சாதாரணத் திராட்சை விலையிலேயே இருந்தது. போய் விசாரித்ததில் அன்றைய தினம் தவறான விலை காகிதத்தைச் சில பொட்டலங்களின் ஒட்டிவிட்டதாகவும் ரசீதைக் கொண்டு வந்து மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார் அந்த ஊளியர்.

எனக்கு மீதிப் பணம் வந்த மகிழ்ச்சியைவிட முந்தைய நாள் அதன் சுவை புத்துணர்ச்சி குறித்து நான் செய்த கற்பனைகள் சிறிது சிரிப்பையும் அவமானத்தையும் தந்தன.

இருந்தாலும் நான் தனி ஆளில்லை... என்பது ஒரு ஆறுதலாக அதேவேளையில் வருத்தமாகத்தான் இருக்கிறது... எத்தனை பேர் மணிரத்தினத்தின் படமனைத்தும் ஒரு 'வித்யாசமாக' நன்றாகத்தான் இருக்கிறது என சிறிது நன்றாக இல்லாத படத்தையும் நியாயப்படுத்த 'ரசிகர்கள்' எத்தனை பேர் இருக்கின்றனர். இளைய ராஜாவின் அனைத்துப் பாடல்களும் அருமை என... பாரதியார் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும் ...என வள்ளுவர் குறளில் குற்ற மேதுமிருக்கத்தான் முடியுமா என.. கூற பலருண்டு.

முகவரிகள் இலக்கை அடைவதற்கே... இலக்குகள் முகவரிகளால் வசியப்படுத்தப்படக்கூடாது.. பாரதியின் கவிதையில் ஏதேனும் கேள்வியை எழுப்பினால் பாரதியை விட பாரதியின் தாசர்கள் சிறிது உணர்ச்சிவசப் படக்கூடும் என்றே தோன்றுகிறது.

தெரிந்த முகவரிகளைக் கொண்டு இலக்குகளை எளிதில் அடைந்து அனுபவிக்கும் அதே தருணங்களில் புதிய இலக்குகளைக் கண்டறியவும் நேரமொதுக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. நமக்குத் தெரிந்தது ஒரு பாரதியாரே..தெரியாமல்.. எத்தனை பேரோ.

கடையில் வாங்கும் முத்தை விட வாய்ப்பிருந்தால் மூழ்கியெடுக்கும் முத்தல்லவோ மேன்மையானது..

~சுகா