Thursday, November 24, 2005

சுயம் எனும் யாகம்

குழந்தை நான்
கண் விழித்தேன்
பளீரென வெளிச்சம்
இருளன்றி இன்னொன்று
பெரிதாக உருத்தவில்லை

அன்னையின் முத்தம்
நெற்றியில் ஈரம்
அது தவிர வேறொன்றும் தோன்றவில்லை

சுற்றிலும் அசைவுகள்
சத்தக் குழப்பங்கள்
நாட்டமில்லை எதிலும் எனக்கு

என் பயமெல்லாம்
எங்கிருந்தோம்..எங்கே இருக்கிறோம் என்பதே

சுற்றியிருந்த தடுப்புச் சுவரெங்கே
தேடுதென் கரங்கள்

காலிலும் ஏதும் இடரவில்லை
இப்படி ஒரு வெறுமையா

இது என்ன மாற்றம்...
பிடிக்கவில்லை எனக்கு

இதன் எதிரொலிப்பு
என் தொண்டையின் நரம்புகளில்

இது என்ன புது உணர்ச்சி
பசியா..இதுவரை இருந்ததில்லையே

தொப்புள் கொடியற்ற வயிற்றின் எரிச்சல்
என் வாய் வழியே வலியாக...

தேவைகள் தீர்கின்றன..
இமை மூடி முன்பிருந்த இடம் போலே உணர்கின்றேன்

எனக்கு தெரிந்ததெல்லாம்
நான்...
என் தேவைகள்..

எனக்கு தேவையெல்லாம்
என் தேவைகளின் தீர்வுகள்..
அது தவிர வேறொன்றும் நான் அறியேன்

வேர்களின் நீர் தேடல் போல்
விகல்பமில்லாத தேடல்

இது என் தேவைகளின் தேடல்
என தைரியமாக கத்தி அழும் தேடல்

இந்த தேடல்களைத் தவிர
எனக்கு வேறொன்றும் முக்கியமில்லை
என அகங்காரமான தேடல்

இதில் எனக்கு அவமானமேதுமில்லை
அது பற்றி நான் அறிந்ததில்லை
அறிய தேவையில்லை

தேவைகளைத் தீர்ப்பவர் பற்றி எனக்கு அக்கரையில்லை
இருந்தாலும் அது என் தேவைகளைத் தீர்ப்பதற்கே

பாசம் பற்றி தெரியவில்லை
இது நான் வாழும் உலகம்
இந்த கருவரைக்குள் இன்னொருவரை பார்த்ததில்லை

தேவைகள் தீர்கின்றன..
புதிய தேவைகள் வளர்கின்றன..

தேவைகளின் தீர்வுகள் எப்போதும் சுலபமாக கிடைப்பதில்லை
தீர்வுகளுக்கும் தேவைகள் உண்டு போல..
என்னிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கின்றன..
நான் தேவைகளை மதிக்கின்றவன் ..
நான் வாய் விரித்து கண் சுருக்கி குரல் கொடுத்தல் தேவை அவர்க்கு
அழகிய சிரிப்பென்று கொஞ்சி பின் என் தேவை தீர்க்கின்றனர்

சுயநலம் நான்...
வருத்தப் படுவதுமில்லை
என்னை யாரும் வருத்தப்படுத்துவதுமில்லை
வயதெனக்கு காப்பு

வருடங்கள் ஓட
மாற்றங்கள்..
மாறி மாறி மாற்றங்கள்

புதிய வார்த்தைகள் .. விளக்கங்கள் .. வரையறைகள்
இவையெல்லாம் தேவையற்றிருந்தேன்..

பாசம் நட்பு கற்பு கரிசனம் நாகரிகம்
ஒழுக்கம் கடமை உரிமை அன்பு பெருமை
கௌரவம் கட்டுப்பாடு வரைமுறை பண்பாடு.. என
வார்த்தைகள் தீர்வதில்லை ..
விளக்கங்கள் ஓய்வதில்லை

இவ்வரையறைகள்
தேவைகளில் ஊடுருவி
மழுப்புகின்றன

தேவைகளையே மறக்கின்றேன்..எனினும்
தேடல்களை விடுவதில்லை

தேவைகள் துவங்கிய தேடல்களே
காலத்தால் தேவைகளாகின்றன..

இது தானா பரிணாமம்
இது தானா வளர்ச்சி

வளர்ச்சிகள் வளர்ந்து
என் தேவைகளையும் பிறர் நிர்ணயிக்கும்
கொடுமைகள் காண்கிறேன்..

ஒடிக் கொண்டே இருப்பது வாழ்க்கையாகிறது
என் வேகம் எனக்கு மதிப்பளிக்கிறது
அந்த மதிப்பு எனக்கு முக்கியம்
என் தேவைகளின் தீர்வுகளுக்கு முக்கியம்
தேவைகளை மறந்தாலும் தீர்வுகளை மறக்கவில்லை

இது சக்கர வியுகம்
மீள்வதெப்படி..
குழந்தை இடமிருந்து கற்க வேண்டும்

பசியென்றால் நாகரிகம்
பார்க்காமல் கை கால்களை
உதைத்து அளும் குழந்தையிடம்
படிக்க வேண்டிய பாடம் அது

தானன்றி தரணியிலே உள்ளதெலாம்
தனித்தே இருக்கட்டுமெனும்
'சுயம்'

~சுகா